• ( 1 )
    திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
    திறலோங்கு செல்வம்ஓங்கச்
    செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
    திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
    மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
    வளர்கருணை மயம்ஓங்கிஓர்
    வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
    வடிவாகி ஓங்கிஞான
    உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
    ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
    உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
    உய்கின்ற நாள்எந்தநாள்
    தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 2 )
    பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
    பசுஏது பாசம்ஏது
    பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
    பாவபுண் யங்கள்ஏது
    வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
    மனம்விரும் புணவுண்டுநல்
    வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
    மலர்சூடி விளையாடிமேல்
    கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
    கலந்துமகிழ் கின்றசுகமே
    கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
    கயவரைக் கூடாதருள்
    தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 3 )
    துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
    துணைஎனும் பிணையல்அளகம்
    சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
    சுழிஎன்ன மொழிசெய்உந்தி
    வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
    மங்கையர்தம் அங்கம்உற்றே
    மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
    மாழ்கநான் வாழ்கஇந்தப்
    படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
    படிஎன்ன அறியாதுநின்
    படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
    படிஎன்னும் என்செய்குவேன்
    தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 4 )
    வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
    மதித்திடுவ தன்றிமற்றை
    வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
    மாட்டினும் மறந்தும்மதியேன்
    கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
    கடவுளர் பதத்தைஅவர்என்
    கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
    கடுஎன வெறுத்துநிற்பேன்
    எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
    என்னை ஆண் டருள்புரிகுவாய்
    என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
    என்றன்அறி வேஎன்அன்பே
    தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 5 )
    பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
    பசுகரணம் ஈங்கசுத்த
    பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
    பதியோக நிலைமைஅதனான்
    மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
    மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
    வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
    வந்துணர்வு தந்தகுருவே
    துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
    துரிசறு சுயஞ்சோதியே
    தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
    சொல்லரிய நல்லதுணையே
    ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
    தலமோங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 6 )
    காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
    கனலோப முழுமூடனும்
    கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
    கண்கெட்ட ஆங்காரியும்
    ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
    றியம்புபா தகனுமாம்இவ்
    வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
    எனைப்பற்றி டாமல்அருள்வாய்
    சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
    திறன்அருளி மலயமுனிவன்
    சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
    தேசிக சிகாரத்னமே
    தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 7 )
    நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
    நிகழ்சாந்த மாம்புதல்வனும்
    நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
    நீக்கும்அறி வாம்துணைவனும்
    மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
    மனம்என்னும் நல்ஏவலும்
    வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
    வாழ்கின்ற வாழ்வருளுவாய்
    அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
    அமுதமே குமுதமலர்வாய்
    அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
    தழகுபெற வருபொன்மலையே
    தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 8 )
    ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவுவேண்டும்
    உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவுகல வாமைவேண்டும்
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
    பேசா திருக்க்வேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
    பிடியா திருக்கவேண்டும்
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
    மறவா திருக்கவேண்டும்
    மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
    வாழ்வில்நான் வாழவேண்டும்
    தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 9 )
    ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
    இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
    திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
    இடுகின்ற திறமும்இறையாம்
    நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
    நினைவிடா நெறியும்அயலார்
    நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
    நெகிழாத திடமும்உலகில்
    சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
    தீங்குசொல் லாததெளிவும்
    திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
    திருவடிக் காளாக்குவாய்
    தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 10 )
    கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
    கதறுவார் கள்ளுண்டதீக்
    கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
    கடும்பொய்இரு காதம்நாற
    வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
    மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
    மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
    வழக்குநல் வழக்கெனினும்நான்
    உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
    ரோடுறவு பெறஅருளுவாய்
    உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
    உவப்புறு குணக்குன்றமே
    தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 11 )
    நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
    நன்மைதீ மைகளும் இல்லை
    நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
    நடுநின்ற தென்றுவீணாள்
    போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
    போதிப்பர் சாதிப்பர்தாம்
    புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
    போந்திடில் போகவிடுவார்
    சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
    தாம்புபாம் பெனும்அறிவுகாண்
    சத்துவ அகண்டபரிபுரண காரஉப
    சாந்தசிவ சிற்பிரம நீ
    தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 12 )
    பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
    பார்முகம் பார்த்திரங்கும்
    பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
    பதியும்நல் நிதியும்உணர்வும்
    சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
    தீமைஒரு சற்றும்அணுகாத்
    திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
    செப்புகின் றோர்அடைவர்காண்
    கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
    þக்‘ழியங் கொடியும்விண்ணோர்
    கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
    கொண்டநின் கோலமறவேன்
    தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 13 )
    வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
    வானைஒரு மான்தாவுமோ
    வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
    மலையைஓர் ஈச்சிறகினால்
    துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
    துரும்பினால் துண்டமாமோ
    சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
    தோயுமோ இல்லைஅதுபோல்
    அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
    அடிமலர் முடிக்கணிந்தோர்க்
    கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
    தற்பமும்வி கற்பம்உறுமோ
    தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 14 )
    காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
    காண்உறு கயிற்றில் அறவும்
    கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
    கதித்தபித் தளையின்இடையும்
    மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
    மாயையில் கண்டுவிணே
    மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
    வாள்வென்றும் மானம்என்றும்
    ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
    உள்என்றும் வெளிஎன்றும்வான்
    உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
    உண்மைஅறி வித்தகுருவே
    தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 15 )
    கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
    கன்மவுட லில்பருவம்நேர்
    கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
    கடல்நீர்கொ லோகபடமோ
    உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
    ஒருவிலோ நீர்க்குமிழியோ
    உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
    உன்றும்அறி யேன் இதனைநான்
    பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
    பட்டுமதி கெட்டுழன்றே
    பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
    பற்றணுவும் உற்றறிகிலேன்
    சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 16 )
    சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
    சஞ்சலா காரமாகிச்
    சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
    தன்மைபெறு செல்வம்ந்தோ
    விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
    விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
    வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
    வேனில்உறு மேகம்ஆகிக்
    கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
    காலோடும் நீராகியே
    கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
    கருதாத வகைஅருளுவாய்
    தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 17 )
    உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
    உற்றசும் பொழுகும்உடலை
    உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
    உற்றிழியும் அருவிஎன்றும்
    வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
    மின்என்றும் வீசுகாற்றின்
    மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
    வெறுமாய வேடம்என்றும்
    கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
    கனவென்றும் நீரில்எழுதும்
    கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
    கைவிடேன் என்செய்குவேன்
    தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 18 )
    எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
    ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
    எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
    இகழ்விற கெடுக்கும்தலை
    கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
    கலநீர் சொரிந்தஅழுகண்
    கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
    கைத்திழவு கேட்கும்செவி
    பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
    பகீர்என நடுங்கும்நெஞ்சம்
    பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
    பலிஏற்க நீள்கொடுங்கை
    சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 19 )
    ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
    அழுதுண் டுவந்ததிருவாய்
    அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
    அணிந்தோங்கி வாழுந்தலை
    மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
    மிக்கஒளி மேவுகண்கள்
    வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
    விழாச்சுபம் கேட்கும்செவி
    துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
    சுகரூப மானநெஞ்சம்
    தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
    சுவர்ன்னமிடு கின்றகைகள்
    சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 20 )
    உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
    ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
    உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
    ஒதிபோல் வளர்த்துநாளும்
    விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
    வெய்யஉடல் பொய்என்கிலேன்
    வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
    விதிமயக் கோஅறிகிலேன்
    கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
    கருணையை விழைந்துகொண்டெம்
    களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
    கண்ணேஎ னப்புகழ்கிலேன்
    தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 21 )
    வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
    வாழ்க்கைஅபி மானம்எங்கே
    மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
    மன்னன்அர சாட்சிஎங்கே
    ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
    நான்முகன் செய்கைஎங்கே
    நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
    நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
    ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
    இலக்கம்உறு சிங்கமுகனை
    எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
    ஈந்துபணி கொண்டிலைஎனில்
    தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 22 )
    மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
    மதித்திடான் நின் அடிச்சீர்
    மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
    மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
    சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
    சிறுகுகையி னு‘டுபுகுவான்
    செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
    செய்குன்றில் ஏறிவிழுவான்
    இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
    இறங்குவான் சிறிதும்அந்தோ
    என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
    கேழையேன் என்செய்குவேன்
    தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 23 )
    வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
    வள்ளல்உன் சேவடிக்கண்
    மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
    வாய்ந்துழலும் எனதுமனது
    பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
    பித்துண்ட வன்குரங்கோ
    பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
    பேதைவிளை யாடுபந்தோ
    காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
    காற்றினாற் சுழல்கறங்கோ
    காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
    கர்மவடி வோஅறிகிலேன்
    தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 24 )
    கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
    கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
    கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
    கருதிலேன் நல்லன்அல்லேன்
    குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
    குற்றம்எல் லாம்குணம்எனக்
    கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
    குறைதவிர்த் தருள்புரிகுவாய்
    பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
    பெற்றெழுந் தோங்குசுடரே
    பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
    பேதமில் பரப்பிரமமே
    தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 25 )
    பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
    பாழ்பட்ட மனையில்நெடுநாள்
    பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
    பட்டபா டாகும்அன்றிப்
    போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
    பூண்பட்ட பாடுதவிடும்
    புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
    போகம்ஒரு போகமாமோ
    ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
    காட்பட்ட பெருவாழ்விலே
    அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
    அமர்போக மேபோகமாம்
    தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 26 )
    சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
    தேவரைச் சிந்தைசெய்வோர்
    செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
    சிறுகருங் காக்கைநிகர்வார்
    நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
    நற்புகழ் வழுத்தாதபேர்
    நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
    நவையுடைப் பேயர் ஆவார்
    நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
    நின்றுமற் றேவல்புரிவோர்
    நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
    நெடியவெறு வீணராவார்
    தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 27 )
    பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
    பெய்சிறையில் இன்னும்ஒருகால்
    பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
    பெறுந்துயர் மறந்துவிடுமோ
    இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
    இறப்பிக்க எண்ணம்உறுமோ
    எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
    இருந்தவடு எண்ணுறானோ
    கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
    காசுக்கும் மதியேன்எலாம்
    கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
    கலந்திடப் பெற்றுநின்றேன்
    தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 28 )
    நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
    நிலன்உண்டு பலனும்உண்டு
    நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
    நெறிஉண்டு நிலையும் உண்டு
    ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
    உடைஉண்டு கொடையும்உண்டு
    உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
    உளம்உண்டு வளமும்உண்டு
    தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
    செல்வங்கள் யாவும்உண்டு
    தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
    தியானமுண் டாயில்அரசே
    தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 29 )
    உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
    ஒல்லைவிட் டிடவுமில்லை
    உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
    உனைஅன்றி வேறும்இல்லை
    இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
    இசைக்கின்ற பேரும்இல்லை
    ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
    றியம்புகின் றோரும்இல்லை
    வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
    மற்றொரு வழக்கும்இல்லை
    வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
    வன்மனத் தவனும்அல்லை
    தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 30 )
    எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
    என்உயிர்க் குயிராகும்ஓர்
    ஏகமே ஆனந்த போகமே யோகமே
    என்பெருஞ் செல்வமேநன்
    முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
    மூர்த்தியே முடிவிலாத
    முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
    முத்தாடும் அருமைமகனே
    பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
    பற்றருளி என்னைஇந்தப்
    படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
    பண்ணாமல் ஆண்டருளுவாய்
    சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ( 31 )
    நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
    நாடாமை ஆகும்இந்த
    நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
    நாய்வந்து கவ்விஅந்தோ
    தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
    தளராமை என்னும்ஒருகைத்
    தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
    தன்முகம் பார்த்தருளுவாய்
    வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
    மழையே மழைக்கொண்டலே
    வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
    மயில்ஏறு மாணிக்கமே
    தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே